பதவிகளுக்கு பணம் - த.வெ.க ஆனந்த் எச்சரிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தில், பதவிகளுக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக விழுப்புரம் நகரத் தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சம் நிர்ணயம் என அம்மாவட்ட தவெக வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடப்பட்டதாக வெளியான Chat ஆல் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பிட் அந்த வாட்ஸ் அப் Chat-ல் புஸ்ஸி ஆனந்த் நம்பரும் இருந்தது. விழுப்புரம் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் தவெக பதவிக்கு பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மாவட்ட பொறுப்பில் இருக்கும் சிலர் பதவிக்கு பணம் கேட்டு நிர்பந்திப்பதாகவும் தகவல் வெளியானது.
கட்சியில் உழைப்பவர்களை விட்டுவிட்டு பணம் கொடுப்பவர்களுக்கு பதவி கொடுப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில், பதவிகளுக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச்செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். பனையூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பதவிகளில் எந்தவித சமரசமும் இன்றி முறையாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டுமென விஜய் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.