பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று முறை போராட்டம் நடத்தியும் தங்களை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவதாக வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கம்போல அதை மறந்து விட்டு ஆசிரியர் சமுதாயத்தை பல வகைகளில் வஞ்சித்து வருவதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கின்றது.  எனவே, பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாகநிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.