நிதி நெருக்கடியை காரணம் காட்டி இப்படி செய்வதா?- டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

நிதி நெருக்கடியை காரணம் காட்டி அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்கப்படும் தமிழ் பாடநூல்களை நிறுத்துவதா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ttv dhinakaran

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்கு வருடந்தோறும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த தமிழ்ப் பாடநூல்கள், நடப்பாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிதி நெருக்கடி எனக் கூறி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த திடீர் முடிவால் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தமிழ்ச்சங்கங்கள் நடத்தி வரும் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழ் ஆட்சிக்காலம் நடைபெற்று வருவதாக மேடைதோறும் பெருமை பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுபுறம் அண்டை மாநிலங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை கூட விலையில்லாமல் வழங்க மறுத்திருப்பது தமிழ் மீதான திமுக அரசின் போலிப்பற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. முதலமைச்சரின் புகழ்பாடவும், அவர் செல்லும் இடங்கள் எல்லாம் விளம்பரம் செய்யவும் பல நூறு கோடி ரூபாயை செலவு செய்யும் போதெல்லாம் ஏற்படாத நிதி நெருக்கடி, அண்டை மாநிலங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கும் போது மட்டும் ஏற்படுகிறதா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. எனவே, வெளி மாநிலங்களில் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் தொய்வை ஏற்படுத்தியிருக்கும் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, வழக்கம் போல அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தமிழ்ப் பாடநூல்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.