வெனிசுலா அதிபர் நாடு கடத்தப்பட்டார் - டிரம்ப் அறிவிப்பு..!
வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ பதவியில் இருந்து அதிரடியாக அகற்றப்பட்டு, நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்குள் அதிகளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வந்தார். இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ நேரடி உடந்தையாக இருப்பதாகவும் டிரம்ப் பகிரங்கமாகச் சாடினார். சமீபத்தில் வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்கா நடத்திய ரோந்துப் பணியின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி பல கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இது இரு நாடுகளுக்கும் இடையே பெரும் போர் பதற்றத்தை உருவாக்கியது.
இந்த மோதலின் உச்சகட்டமாக, இன்று அதிகாலை 2 மணியளவில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் (Caracas) சுமார் 7 முக்கிய இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலால் வெனிசுலாவின் ராணுவத் தளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
தாக்குதல் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதில், "வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கச் சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.



