நடக்கப்போவது நல்லவையாக இருக்கட்டும்: திருச்சி சிவா

 
சிவா

திருச்சி மாநகரம் ராஜா காலனி அருகே இறகு பந்து மைதானத்தை திறப்பதற்காக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு சென்றபோது திருச்சி சிவாவை திருச்சி மாவட்ட திமுகவினர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கே.என் நேருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி அவருக்கு கருப்பு கொடி காட்டினர். இது தொடர்பாக கண்டன கோஷங்களை எழுப்பியவர்களை செசன்ஸ் கோர்ட் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

Image

திடீரென காவல் நிலையத்திற்குச் சென்ற திமுகவை சேர்ந்த காஜாமலை விஜய், முத்து செல்வம், ராமதாஸ் துரைராஜ், திருப்பதி உள்ளிட்டோர் கருப்புக் கொடி காட்டியவர்களை காவல் நிலையத்திற்குள் வைத்து தாக்கினார். இது தொடர்பாக அவர்கள் 5 பேர் மீதும் கலவரம் ஏற்படுத்த முயற்சித்தம், பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படுத்துதல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 9 பிரிவுகளிப் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

பின்னர் விழா முடிந்து அமைச்சர் நேரு காரில் ஏறி சென்ற போது அவருடன் பின்னால் வந்த அவரது ஆதரவாளர்கள் சிவாவின் வீட்டை கற்களாலும், உருட்டு கட்டைகளாலும் தாக்கினர் . இதில் சிவாவின் கார் ,பைக்குகள் கடும் சேதமடைந்தன.  வீட்டின் கதவு கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் திருச்சி சிவாவை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, “நேரு ஆற்றுகிற பணியினை என்னால் ஆற்ற முடியாது. நாடாளுமன்றத்தில் நான் ஆற்றுகிறப் பணிகளை அவரால் ஆற்ற முடியாது. ஆனால், இருவரும் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவே அவரவர் தளத்தில் பணியாற்றுகிறோம். எங்களை பொறுத்தவரை இயக்கத்தின் வளர்ச்சி முக்கியம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்,  நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்றார். இந்த சந்திப்பின் போது எம்எல்ஏக்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.