புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை, பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காதது ஏன்?- டி.ஆர்.பி.ராஜா

 
as

ஒப்பந்தங்கள் கையெழுத்தான 97 நிறுவனங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு அரசு வழங்க வேண்டும் என தி.மு.க முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில், “இன்று அறிவிக்கப்பட்ட 97, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை வேண்டும். தவெக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது ஏன்? இன்றைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்தியாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படாதது தீவிரமான சந்தேகங்களை எழுப்புகிறது. 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை. 70 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே உள்ள நிறுவனங்களில் விரிவாக்கத் திட்டங்கள் அல்லது திராவிட மாடல் அரசால் முன்னேடுக்கப்பட்ட முதலீட்டு முயற்சி. ‘டைட்டன்’ நிறுவனத்துக்கான ரூ.1,000 கோடி முதலீடு, TIDCO மூலம் அந்நிறுவனத்துடன் மாநில அரசுக்கு ஏற்கனவே உள்ள உடன்பாடின் அடிப்படையில் அமைந்தது.


தமிழ்நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது! என் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியே முதன்மையானது. தமிழ்நாடு பெறுகிற ஒவ்வொரு முதலீடும், வேலைவாய்ப்பும் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியவைதான். அதனால்தான், இன்று அறிவிக்கப்பட்டிருக்கிற 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை தேவை என்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.