கனமழையால் மேட்டுப்பாளையம் -உதகை இடையிலான ரயில் போக்குவரத்து ரத்து

கனமழையால் மேட்டுப்பாளையம் -உதகை இடையிலான ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை ஏழு பத்து மணிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். கடந்த 3ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மலைரயில் மலைப்பாதையில் கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரன்னிமேடு ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தது. மேலும் மரங்களும், தண்டவாளத்தில் சரிந்தன. இதனால் கடந்த 4 ம் தேதி வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் உதகைக்கு புறப்பட வேண்டிய மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து இருபதற்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் தண்டவாள பாதையில் சரிந்து கிடந்த மண் சரிவுகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்..ஆனால் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற பகுதிகளில் தொடர் மழை காரணமாக பணிகள் தாமதமானதோடு மேலும் சில இடங்களில் சரிவுகள் ஏற்பட்டன. தொடர்மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரயில் போக்குவரத்து வரும் 16 ஆம் தேதி வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.