ரயில் பயணிகளே உஷார்! ஆதார் இணைப்பு இருந்தால் மட்டுமே இனி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு,,!
ரயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க, பயணிகள் தங்களின் ஐ.ஆர்.சி.டி.சி. கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண் இணைக்காவிட்டால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே முன்பதிவு டிக்கெட் எடுக்கவும் ஆதார் அவசியம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
அதாவது, கடந்த மாதம் 29-ம் தேதி முதல் கடந்த 4-ம் தேதி வரை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நேரம் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பதில் எந்த வித மாற்றங்களும் இல்லை.


