விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்திருந்த சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

 
river death

சேலம் அருகே செங்காட்டூர் கிராமத்தில்  செங்கல் சூளைக்காக, குளம்  தோண்டி  தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி ஆகிய இரு சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death

சேலம் மாவட்டம் , வீராணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சியில் செங்காட்டூர் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் தங்கராஜ் என்பவர், தனது  செங்கல் சூளையில், குளம் ஒன்றினை வெட்டி  அதில் தண்ணீர் தேக்கி வைத்துள்ளார். செங்கல் சூளைக்கு பயன்படுத்துவதற்காக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் அருகே உள்ள ஏற்காடு மலை கிராமமான மதூர் கிராமத்தில் வசிக்கும் ராமசாமி, புஷ்பா தம்பதியினரின் குழந்தைகளான ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் வசந்தகுமார் மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது  சிறுவன் ஸ்ரீ ஆகியோர் செங்காட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். 

பின்னர் இன்று பிற்பகலில் செங்காட்டூர் பகுதியில்  உள்ள செங்கல் சூளை தண்ணீரில் குளிப்பதற்காக சென்று அங்கு குளித்துள்ளனர். அப்போது குளத்தில் சேறு அதிகம் இருந்ததால் சிறுவர்கள் இருவரும் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்  சம்பவ இடம் சென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மீட்டனர். சிறுவர்கள் உயிரிழந்த தகவலை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த சிறுவர்களின்  உடலைப் பார்த்து கதறி அழுதனர். மேலும்  பாதுகாப்பு இல்லாமல், குளத்தை தோண்டி தண்ணீரை தேக்கி வைத்து, சிறுவர்கள் உயிரிழக்க காரணமான செங்கல் சூளை உரிமையாளர் தங்கராஜ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து,  அங்கு வந்த வட்டாட்சியர் செம்மலை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உறவினர்களை சமாதானப்படுத்தி, பின்னர் சிறுவர்கள் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர்.