தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் வெளியீடு - டி.ஆர்.பாலு விமர்சனம்!

பீகார் மற்றும் டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து 8வது முறையாக ஒன்றிய பட்ஜெட் 2025-2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை புறக்கணித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் விதமாக புதிய வருமான வரி மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். புதிய வருமான வரிமுறையில் 12 லட்சம் ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு வரியில்லை.
இந்த நிலையில், பீகார் மற்றும் டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு விமர்சனம் செய்துள்ளார். ஒன்றிய அரசுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்யும் பீகார் அரசுக்கு திட்டங்களை ஒன்றிய அரசு வாரி வழங்கியுள்ளது. டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டும் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.