அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..

 
கல்லூரி மாணவர்கள்

அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க  நாளை கடைசி நாள் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் மொத்தம்  164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு  இளநிலை படிப்புகளில் 1 லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப  மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது.  அன்றைய தினமே 12ம் வகுப்பு  தேர்வு முடிவுகள் வெளியாகின. மாணவர்கள் கல்லூரிகளில் சேர ஏதுவாக தற்போது பள்ளிகளில் மாதிரி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதனையொட்டி மாணவர்கள் பலர் ஆர்வமுடன் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 2 லட்சத்து 37,985 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். அதில் 1 லட்சத்து 85,009 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும்  செலுத்தியுள்ளனர்.

அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..

இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நாளையுடன் (மே 19) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ள மாணவர்கள்   http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக விரைவில்  விண்ணப்பிக்க வேண்டும் எனவும், விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.  அதன்பின் சேர்க்கை கலந்தாய்வு (கல்லூரி அளவில்) மே 25 முதல் ஜூன் 20-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும்  என்றும்,  தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.