சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு..

சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது.
பல்வேறு மாநிலங்களையும், முக்கிய நகரங்களையும் இணைப்பதில் தேசிய நெடுஞ்சாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சரக்கு பரிமாற்றத்தில் விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் தான் கொடுக்கின்றன. அத்துடன் மேலும் பல நகரங்களை இணைக்கும் வகையில் புதிய சாலைகளையுக்ம் நெடுஞ்சாலைத்துறை அமைத்து வருகிறது. ஆனால் இந்த நெடுஞ்சாலைகளில் பயணிக்க நாம் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைத்து, கட்டணம் வசூலித்து வருகிறது.
அந்தவகையில் நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டும் 48 தேசிய சுங்கச்சாவடிகள் உள்ளன. முன்பெல்லாம் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.. ஆனால் தற்போது பாஸ்ட்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், பல மணி நேரம் காத்திருப்பது குறைந்திருக்கிறது. இந்த சுங்கச் சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவிகிதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அந்தவகையில் சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது சுங்கக்கட்டண உயர்வு மார்ச் 31-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கோவை, மதுரை செல்லும் வழிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.