தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் இன்று முதல் உயர்வு..

தமிழகத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 816 சுங்கச்சாவடிகல் அமைந்துள்ளன. இங்கு 4 சக்கர வாகனம், பேருந்து, லாரிகள், கனரக வாகனம் என வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப ரூ.85 முதல் ரூ.470 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் அவ்வப்போது வெவ்வேறு சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு இருமுறை, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் மொத்தமுள்ள 50க்கும் மேற்பட்ட டோல்கேட்களில், கடந்த ஏப்ரல் மாதம் 29 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில் பரனூர், வானகரம், செங்குன்றம், பட்டரைப்பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகள் அடங்கும்.
இந்நிலையில் தமிழகத்தில் மீதம் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று (ஆகஸ்ட் 31-ந்தேதி) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த முறை மதுரை, திண்டுக்கல், திருச்சி, மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி, எலியார்பத்தி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன்படி ஒருமுறை கட்டணம் ரூ.5 முதல் ரூ.45 வரையிலும், இருமுறை கட்டணம் ரூ.10 முதல் ரூ.65 வரை உயர்வதா தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மாதாந்திர கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.