பள்ளி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்... இன்றே கடைசி நாள் - உடனே விண்ணப்பிக்க அரசு அழைப்பு!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் (பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய இணையதளம் அறிமுகம் செய்துள்ளது. மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதேபோல் மத்திய அரசு நிதி ஆதரவிலான ப்ரி மெட்ரிக் (9 மற்றும் 10ஆம் வகுப்புகள்) கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் தமது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்ய வேண்டும்.
சாதி சான்று, வருமான சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்புக் கணக்குப் புத்தக நகல், ஆதார் எண் உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் இன்று மாலைக்குள் (ஜன.13) கல்வி இணையதள வழி (https://escholarship.tn.gov.in/) விண்ணப்பிக்க வேண்டும்.கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களுக்குரிய கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்திடவும், மாணாக்கர்கள் சார்பான விண்ணப்பங்களை எவ்வித தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி வெளியாகியிருந்தது” என்று கூறப்பட்டுள்ளது.