TNPSC அறிவிப்பு! – ஊரக வளர்ச்சித் துறையில் 839 காலிப் பணியிடங்கள்; ஜூலை 17 முதல் விண்ணப்பிக்கலாம்!
டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் மற்றும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது.விருப்பம் உள்ள தேர்வர்கள் வருகிற 17-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை யு.பி.ஐ. மூலமாகவும் செலுத்தலாம். ஓ.எம்.ஆர்., கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றூம் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
ஒருமுறைப் பதிவு மற்றும் இணைய வழி விண்ணப்பம் :
தேர்வர்கள் https://apply.tnpscexams.in எனும் தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் (OTR) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். தேர்வர்கள் ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யலாம்.
விண்ணப்பத் திருத்தச் சாளரம் :
இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளுக்குப் பின்னர், விண்ணப்பத் திருத்தச் சாளரம் 19.08.2026 முதல் 21.08.2026 வரை மூன்று நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். இக்காலத்தில் தேர்வர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்ய இயலும். விண்ணப்பத் திருத்தச் சாளரக் காலம் முடிந்த பின்னர் இணையவழி விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.

