பொங்கல் பரிசுத் தொகுப்பு கரும்பை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் - தமிழக அரசு உத்தரவு..
பொங்கல் பண்டியைகையொட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள கரும்புகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி 20 பொருட்கள் மற்றும் கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படுமென தமிழக அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்திருந்தது. அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழக்கும் திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் கரும்புகளை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் சில வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டிருக்கிறது. அதில் பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் எனவும், கருமின் உயரம் 6 அடிக்கும் குறையாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் இதரவு செலவுகள் சேர்த்து கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை 33 ரூபாயாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் கரும்பு சராசரி தடிமனை விட கூடுதலாக இருக்க வேண்டும் என்றும், நோய் தாக்கிய கரும்புகள் கொள்முதல் செய்யப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்ததந்த மாவட்டங்களில் விளையும் கரும்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் தரப்பிலிருந்து புகார்கள் வராத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலை 10% அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்றவாறு கொள்முதல் விலையை கூடுதலாக நிர்ணயிக்க வேண்டும் எனவும், கரும்புகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ மட்டும் தான் என கொள்முதல் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் கொள்முதல் செய்யப்பட்ட கரும்பின் விலை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என்றும், கரும்புகளை பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதற்கு ஏற்ப படிப்படியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், கரும்புகள் காய்ந்து போக வாய்ப்பிருப்பதால் மொத்தமாக வாங்கி வைக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்பின் நுனியில் இருக்கும் தோகையை வெட்டாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.