ஜன. 17ல் ரேஷன் கடைகள் இயங்கும்...அன்று இந்த பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் வரும் 17ம் தேதி ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 16 (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர் விடுமுறை உள்ளது. ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்பதாலும் , 18.1.2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட 17.1.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தன. இதனையடுத்து ஜனவரி 17 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து அன்றைய தினம் ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அளித்து உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டது. இதுகுறித்து தமிழக அரசு இரண்டு தினங்களுக்கு முன்பு ( ஜன 12) அரசாணையும் வெளியிட்டது. அதற்கு பதிலாக வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று , குடும்ப அட்டை தாரர்கள் அத்தியாவசிய சேவைகளை பெற ஏதுவாக, 17ம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் மற்ற ரேஷன் பொருட்களை வாங்காதவர்கள் ஜனவரி 17ல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உணவு வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.