"குமரி மீனவர் பெத்தாலிஸை மீட்க நடவடிக்கை தேவை" - வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

 
tn

ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.பெத்தாலி அவர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

ஓமன் நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் திரு. பெத்தாலி என்பவரை மீட்டுக் கொண்டுவரவும், ஓமனில் மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த மீனவக் குழுவினரின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்கவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (21-11-2023) கடிதம் எழுதியுள்ளார்.

stalin

அந்தக் கடிதத்தில், ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தில் உள்ள NOOH 1012 மற்றும் YAYA 1184, அல்ரெடா (ஓமானியன்) ஆகிய மீன்பிடிப் படகுகளில் வேலை செய்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில், திரு. பெத்தாலிஸ் என்பவரும் பணிபுரிந்து வந்ததாகவும், அந்த மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் சம்பளத்தை உரிமையாளர் தராததால் உரிமையாளருக்கும், மீனவர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்த நிலையில், திரு. பெத்தாலிஸ் அவர்களை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை உடனடியாகக் கண்டுபிடித்து, இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு திரு. பெத்தாலிஸ் அவர்களது மனைவி திருமதி ஷோபா ராணி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

jaishankar

இந்த நிலையில், ஓமன் நாட்டிலுள்ள, இந்தியத் தூதரகம் மூலம் திரு. பெத்தாலி அவர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.