நிதி நெருக்கடி காரணமாக பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 வழங்க முடியவில்லை- தங்கம் தென்னரசு
தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாரிமுத்து, தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல், மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டு நாம் ஒன்றிய அரசிடம் 37,000 கோடி ரூபாய் நிதி வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு 276 கோடி ரூபாய் தான் வழங்கியுள்ளது. அதேபோல் சர்வ சிக்ஷா திட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கு 2155 கோடி இதுவரை விடுவிக்கவில்லை. இப்படி நிதி நெருக்கடியில் தமிழ்நாடு அரசு சிக்கி உள்ள காரணத்தினால் தான் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் வழங்கவில்லை” என பதில் அளித்தார்.