“தெர்மாகோல் தெர்மாகோல் என என்னை ஓட்டுகின்றீர்கள்..”- பேரவையில் கெஞ்சிய செல்லூர் ராஜூ
திமுக ஆட்சி அமைந்த பிறகு எத்தனை பேருந்துகள் வாங்கப்பட்டன என்று விளக்கபடவில்லை? என சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், "சனிக்கிழமை காலை வந்தால் எத்தனை பேருந்துகள் வாங்க உள்ளோம் என்பதை நேரில் பார்த்துக் கொள்ளலாம். மினி பேருந்துகளுக்கான அனுமதி தொடர்பாக வழிதடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மே மாதம் முதல் வாரத்தில் மினி பேருந்துகள் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்" என்றார்.
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளி கட்டிடம் சேதம் அடைந்துள்ளன என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஐ. பெரியசாமி, “50 ஆண்டு காலம் கட்டப்படாத பள்ளிகள் எல்லாம் புதிதாக, அழகான பள்ளிகளாக உருவாக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஆண்டு 6,000 பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. உங்கள் ஆட்சியில் எவ்வளவு பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என கூறுங்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

செல்லூர் ராஜூவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், “அதிமுக ஆட்சியில் 513 பள்ளிகளை தரம் உயர்த்தியுள்ளனர், அதில் 300க்கும் அதிகமான பள்ளிகளில் உள்கட்டமைப்பு இல்லாமல் இருந்தது, அதையும் சேர்த்து நாங்கள் இன்று கட்டுகிறோம். திமுக ஆட்சியில் 7,600 வகுப்பறைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன” என்றார். பின்னர் செல்லூர் ராஜூ, ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “தண்ணீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து, ஒன்றிய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும்” என நகைச்சுவையாக கூறினார். உடனே செல்லூர் ராஜூ, "தெர்மாகோல்.. தெர்மாகோல்னு.. சொல்றீங்க, ஆனால் அதிகாரி சொல்லித்தானே போனோம். இப்படி கிண்டல் செய்கிறீர்கள், சரி பரவாயில்லை" எனக் கூறினார்.


