“தவெகவினர் தான் கொள்ளை அடிக்கின்றனர்”- டி.கே.எஸ்.இளங்கோவன்
எங்களை குறை சொல்வதற்கு விஜய்க்கு எந்த தகுதியும் இல்லை என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், “கரூர் கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்தது தான் உயிரிழப்புகளுக்கு காரணம். அதற்கு தற்போது வரை பதிலில்லை. தன்மீது தவறு இருப்பதால் விஜய் கரூர் விவகாரம் குறித்து ஒருபோதும் பேசமாட்டார். கொள்ளை அடித்ததாக யார் வேண்டுமானாலும் பேசலாம். அதிமுக, பாஜகவின் கொள்ளை பற்றி விஜய் பேசுவாரா? பாஜகவின் அடிமையாக விஜய் இருக்கிறார். பாஜக பேசச் சொல்லும் கருத்துகளை விஜய் பேசி வருகிறார். எங்களை குறை சொல்வதற்கு விஜய்க்கு எந்த தகுதியும் இல்லை.
திமுக அரசு கொள்ளை அடிப்பதாக குற்றஞ்சாட்டும் விஜய், தவெகவில் லஞ்சம் வாங்கிவிட்டு பதவி வழங்கப்படுவதை மறந்துவிட்டாரா? பொறுப்பு வழங்க காசு கேட்பதாக தவெகவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தவெகவினர்தான் கொள்ளை அடிக்கின்றனர். தமிழ்நாட்டு பிரச்சனை பற்றி விஜய் என்ன பேசியிருக்கிறார். மதுரை, கோவை மெட்ரோ ரயிலுக்கு அனுமதி கொடுக்காத பாஜகவை எதிர்த்து விஜய் பேசாதது ஏன்? விஜய்க்கு அண்ணாவை பற்றி தெரியாது. அண்ணா முதல்வராக வேண்டும் என கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களுக்காக போராடுவேன் எனக்கூறி கட்சி தொடங்கி சிறைக்கு சென்றவர் அண்ணா. அண்ணாவின் கொள்கைகளை தான் திமுக தற்போது வரை நிறைவேற்றிவருகிறது.” என்றார்.

