திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு- 4ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள்
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி வரும் 4ம் தேதி முதல் சென்னை, திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “07/07/2025 அன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் (கும்பாபிஷேகம்) குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் 04/07/2025 முதல் 06/07/2025 வரை கீழ்கண்ட இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கும் மற்றும் 07/07/2025 அன்று திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை , திருச்சி, புதுச்சேரி, கும்பகோணம், சேலம், பெங்களூரு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பக்தர்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


