சமயோசித செயல்! மருந்துகடை உரிமையாளரின் முதலுதவியால் (CPR) உயிர் பிழைத்த நபர்..!

 
1

உத்தராகண்ட் மாநிலத்தில் மருந்துகடை உரிமையாளரின் துரிதமான முதலுதவியால் (CPR) மாரடைப்பு ஏற்பட்ட நபர் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார். இந்த பரபரப்பான சம்பவம் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தராகண்ட் மாநிலம் கர்ணபிரயாக் - சிம்லி சாலையில் அமைந்துள்ள ஒரு மருந்தகத்திற்கு நபர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார்.

இதைக் கண்டு சற்றும் பதற்றமடையாத மருந்துகடையின் உரிமையாளர், உடனடியாக அந்த நபருக்குத் தாமதிக்காமல் நெஞ்சு அழுத்தல் முதலுதவி (CPR) சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். அவரின் இந்தத் துரிதமான மற்றும் சமயோசிதமான நடவடிக்கையால், மயக்கமடைந்த நபரின் சுவாசம் மீண்டு வந்து உயிர் பிழைத்தார்.

அதன்பின்னர், அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சரியான நேரத்தில் முதலுதவி அளித்து ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய மருந்துகடை உரிமையாளரின் இந்தச் செயலை இணையவாசிகளும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.