அடுத்த 10 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை: 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

 
rain

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், வளிமண்டல சூழல் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை தொடர வாய்ப்புள்ளதாக ஹேமச்சந்தர் தனது வானிலை கணிப்பில் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 15 முதல் 22 வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 21 உள் மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் வானிலை மாறி இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால் பொதுமக்கள் திடீர் மழை மற்றும் இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக திறந்தவெளிப் பகுதிகள் மற்றும் மரங்களுக்கு அருகில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலும் மழையும் மாறி மாறி நீடிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளூர் வானிலை நிலவரங்களை கவனித்து செயல்படுவது அவசியம்.