2 மனைவிகளை திருமணம் செய்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும் : காங்கிரஸ் வேட்பாளர் பேச்சால் பரபரப்பு..!

 
1

வரும் 13-ம் தேதி மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியினரின் பேச்சு சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் காந்திலால் புரியா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ. 1 லட்சம் செலுத்தப்படும். இது தேர்தல் வாக்குறுதி. அதேபோல, 2 மனைவிகள் வைத்திருப்போருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

காந்திலால் புரியாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, அவர் மீது பாஜக சார்பில் மத்திய பிரதேச மாநில செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக பாஜக தலைவர்களும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். "தொடர்ந்து பெண்களை அவமதிக்கும் காங்கிரஸுக்கு இந்த தேர்தலில் பெண்கள் பாடம் புகட்டுவார்கள்" என அவர்கள் கூறியுள்ளனர்.