துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - திமுக அரசின் மன்னிக்க முடியாத துரோகம் !!

 
ttv dhinakaran

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளின் மீதும் குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்வதே உயிரிழந்த அனைவருக்கும் செலுத்தக் கூடிய உண்மையான அஞ்சலி என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் நினைவுதினம் இன்று. 

Tuticorin Shooting

தமிழ்நாட்டையே கொந்தளிக்கவைத்த துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான காவலர்கள், உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் என அனைவரின் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற உயிரிழப்புகளை எதிர்கொண்ட குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு தற்போது வரை நிறைவேறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. 

பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இந்த கொடியசம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் படி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அதே அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி அழகுபார்த்த திமுக அரசின் துரோகம் மன்னிக்க முடியாத குற்றமாகும். 



அறவழியில் போராடி துப்பாக்கிச்சூட்டிற்கு பலியான 13 பேரின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில், கொடூரச் சம்பவம் அரங்கேற காரணமாக இருந்த அனைத்து அதிகாரிகளின் மீதும் குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்வதே உயிரிழந்த அனைவருக்கும் செலுத்தக் கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.