தங்கம் விலை உயர்வுக்கு இது தான் காரணம் - மத்திய நிதித்துறை இணை மந்திரி பதில்..!
Dec 16, 2025, 08:48 IST1765855129406
நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில், தங்கம் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
தங்கம் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை. சர்வதேச விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை, வரிகள் ஆகியவை அடிப்படையில், தங்கம், வெள்ளி விலை தீர்மானிக்கப்படுகிறது. நடப்பாண்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
தற்போதைய விலை உயர்வுக்கு புவிஅரசியல் பதற்றம் அதிகரித்து வருவதும், சர்வதேச வளர்ச்சி குறித்த நிச்சயமற்ற நிலையும்தான் காரணங்கள். அதனால் பாதுகாப்பான முதலீட்டு தேவை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் தங்கத்தை கணிசமாக கொள்முதல் செய்கின்றன.
நுகர்வு, முதலீடு என இருவிதங்களில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. அவை பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகின்றன. வீட்டில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு உயர்வதால், தங்கம் விலை உயர்வை குடும்ப சொத்து உயர்வாக மக்கள் பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

