திருவண்ணாமலை தீப திருவிழா : மகா தீப கொப்பரைக்கு திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள்!
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் நாளை நடைபெற உள்ள நிலையில் மகா தீப கொப்பரை திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் என்று அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூதங்களில் அக்னி தலமாக பார்க்கப்படுகிறது. இத்தலத்தின் மூலவர் அருணாச்சலேஸ்வரர் எண்ட்ரஸ் பெயரிலும், அம்பிகை உண்ணாமலை அம்மாள் என்ற பெயரிலும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இத்தலத்தில் உள்ள எல்லா மலைகளும் அழியாமல் இருப்பதாகவும் , இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் கூறியுள்ளார்கள். இதனால் இம்மலையை பவுர்ணமி நாட்களில் வலம் வருவதை கிரிவலம் என்றும் அழைக்கின்றனர். பல நகரங்களிலிருந்தும் ,ஊர்களிலிருந்தும், மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இங்கு வந்து சமாதி அடைகின்றனர்.
சேஷாத்ரி சுவாமிகள் ,குரு நமசிவாயர், குகை நமசிவாயர் போன்றோர் இங்கு சமாதி அடைந்தவர்கள் என்பது கூடுதல் தகவல் . முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கை. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் தீபத் திருவிழா கடந்த நவம்பர் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா தீபத் திருவிழாவின் நிறைவு நாளான நாளை அதிகாலை 4 மணிக்கு திருக்கோவிலில் அண்ணாமலையார் கருவறையின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.
இதற்காக பயன்படுத்தப்படும் 5.9 அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட மகா தீப கொப்பரைக்கு இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் 3,500 லிட்டர் நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.