‘விடுதலை 2’ திரைப்படம் முக்கியமான அரசியலைப் பேசியுள்ளது- திருமாவளவன்

 
திருமா

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள விடுதலை இரண்டாம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்று வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  திரையரங்கில் விசிக தலைவரும் ,  நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் படத்தின் நடிகர்களோடு கண்டுகளித்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், “தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு இந்த படம் அமைந்துள்ளது. முக்கியமான அரசியலை விவாதிக்கிற படமாக இந்த படம் அமைந்துள்ளது. புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற கம்யூனிஸ அரசியலை இத்திரை திரைப்படம் பேசியுள்ளது. தமிழ் தேசியம் என்பது மொழி உணர்வு ,தேச உணர்வோடு தொடர்புடையது மட்டுமல்ல.அது இன்னும் ஆழமானது, வலிமையானது என்பதை இந்த படத்தை பார்க்கும் இளைஞன் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் என்பதை எதிர்க்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் அரசியலின் அடிப்படை கருத்து .அதனை மையப்படுத்தி தான் இந்த படம் மிகச் சிறப்பான முறையில் படைக்கப்பட்டுள்ளது. 

கீழ்வெண்மணி போராட்ட வரலாறு இன்றும் நீடிக்கிறது. நாளுக்கு நாள் வலதுசாரி அரசியல் வலிமை பெற்று வரும் சூழலில் இடதுசாரி அரசியலின் தேவையை இளம் தலைமுறைக்கு உணர்த்தக்கூடிய மகத்தான படைப்பாக விடுதலை பாகம் 2 வெளிவந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் செல்வாக்கோடு மாபெரும் வெற்றியை பெரும்.அந்த வரிசையில் இந்த படம் மாபெரும் வெற்றிப்படம். இந்த படம் பேசியுள்ள அரசியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது” எனக் கூறினார்.