பாமகவின் தேர்தல் தந்திரம் இதுதான் - திருமாவளவன் பரபரப்பு பேட்டி

 
thirumavalavan

திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் கிராமத்தில் கட்சி நிர்வாகி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்பட்டு வருவது குறித்து திமுக தலைவர், திமுக கூட்டணியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து உள்ளார். அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி நெஞ்சார பாராட்டி வரவேற்கிறது. திமுக முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விசிக உற்ற துணையாக இருக்கும். திமுக தலைவரின் பிறந்தநாள் கூட்டம் என்பது ஒரு கொள்கை பிரகடனம்,  இந்த நேரத்தில் மம்தா பேனர்ஜி அவர்கள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. ஆகவே திமுக தலைவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். பாஜக எதிர்ப்பு அணியினர் ஓர் அணியாக திரண்டு தேர்தலை சந்திக்க வேண்டும்.

திமுகவிற்கும் விசிகவிற்கும் இடையே முரண்பாடுகளை, விரிசல்களை ஏற்படுத்த வேண்டும் என சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை, அதுபோன்ற எண்ணங்களில் காத்திருப்போர் ஏமாந்து போவார்கள். பாமகவின் கலாச்சாரம் என்பது ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு தேர்தல் நெருங்கி வரும் ஓரிரு ஆண்டுகளில் எந்தக் கூட்டணியில் இருக்கிறார்களோ அக்கூட்டணியில் இருந்து மெல்ல விலகுவார்கள். ஓரே அணியில் இல்லை என்பதை தெரிவிப்பார்கள். அப்படி இருந்தால் பேரத்தின் வலிமையையை கூட்ட முடியாது என்பதை உணர்த்தவே இது போன்ற செயலில் பாமகவின் இரு தலைவர்களும் செயல்பட்டு வருகிறார்கள். பேரத்தின் வலிமையை பெருக்குவதற்காக இதுபோன்ற சூழ்ச்சிகளையும் உத்திகளையும் பாமக செய்யும்.

திமுகவுடன் பேசிக்கொண்டே அதிமுகவிடம் பேரத்தை உயர்த்துவதும், அதிமுகவுடன் பேசிக்கொண்டே திமுகவிடம் பேரத்தை உயர்த்துவதும் பாமகவின் தேர்தல் தந்திரம்” எனக் கூறினார்.