திருப்பதி கோயிலில் திருமாவளவன் சாமி தரிசனம்
பாதுகாப்புத் துறை தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு திருப்பதி வருகை புரிந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்தனர்.
பாதுகாப்புத்துறை தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவினர் நேற்று இரவு திருமலைக்கு வந்தனர். அவர்கள் இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வழிப்பட்டனர். பின்னர் கோயிலுக்குள் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் பாதுகாப்புத்துறை தொடர்பான பாராளுமன்ற நிலை குழுவினர் கடந்த 22 ம் தேதி காஷ்மீரில் துவங்கி பெங்களூர், கோவை, நீலகிரி, சென்னை ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் செய்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தி இருக்கிறோம். நிறைவாக இன்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஷ் ஷிட்டர் தலைமையில் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை வழிப்பட்டோம். எங்களை சிறப்பான முறையில் வரவேற்ற தேவஸ்தான நிர்வாகம் சாமி கும்பிட ஏற்பாடுகளை செய்து கொடுத்தது. இந்த பயணம் மகிழ்ச்சியாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

