"பாட்டை நிறுத்துவியா மாட்டியா?" - தவெக ஆட்டோவை தெறித்து ஓடவிட்ட திலகபாமா
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா மகாகவி பாரதி நகர் பகுதியில் உள்ள தெருக்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சரியாக எட்டு மணியளவில், மகாகவி பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே தனது பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பேச தொடங்கினார். அவர் பேச ஆரம்பித்து சில நிமிடங்களில் அவ்வழியே தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார ஆட்டோ ஒன்று அக்கட்சியின் பிரச்சார பாடலை ஒலிக்கவிட்டபடி கடந்து சென்றது.
சரியாக ஐந்து நிமிடங்களில் அந்த பிரச்சார ஆட்டோ மீண்டும் அவ்வழியே திரும்ப பிரச்சார பாடலை ஒலிக்கவிட்டபடி வந்தது. இம்முறை பாடல் ஒலியின் அளவு சற்று கூடுதலாக இருந்தது. இதனை திலகபாமாவுடன் பிரச்சார வாகனத்தில் இருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் கவனித்து ஆட்டோவில் இருந்த தவெக தொண்டர்களை பார்த்து ஒலியை குறைக்கும்படி சைகை செய்தனர். ஆட்டோவில் இருந்தவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனை கவனித்த திலகபாமா ஆட்டோவில் இருந்த நபர்களை பார்த்து, "பாட்ட நிறுத்துவியா மாட்டியா? நான் தேர்தல் ஆணையத்தில் முறையான அனுமதி பெற்று இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன். அப்படி பேசும்போது நீங்கள் ஒலியின் அளவை குறைக்க வேண்டும். வேண்டுமென்றே இங்கேயே சுற்றுக்கொண்டிருக்கிறீர்கள், முதலில் ஒலியின் அளவை குறையுங்கள் இல்லையென்றால் உங்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பேன்" என்று கூறினார்.
ஆனால், ஆட்டோவில் இருந்தவர்கள் எதற்கும் மசியாமல் அதிக சத்தத்துடன் மெதுவாகவே சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக, பாமக, பாஜக தொண்டர்கள் அந்த ஆட்டோவை சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தவெக-வினர் ஆட்டோவை வேகமாக இயக்கி அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். இப்படி பயந்து ஓடுகிறவர்கள் நமக்கு தேவைதானா என அங்கிருந்த பொதுமக்களை பார்த்து திலகபாமா கேள்வி எழுப்பினார்.



