"நாக்கு கூசாமல் பொய் சொல்றாங்க!" - எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அட்டாக்!

 
1

 எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- என்ன தான் ஆச்சு இந்த முதல்வருக்கு? ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அ.தி.மு.க. திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே.

இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ, அ.இ.அ.தி.மு.க.-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே 7.5 சதவீதம் திட்டம் குறித்து ஒரு வரலாற்றுப் பொய்யை நாக் கூசாமல் மருத்துவத்துறை அமைச்சர் வாயிலாக பேசியதை, நேற்று சட்டமன்றத்திலேயே தோலுரித்தேன்.

நேற்று முன்தினம் மாலை, தனது தொடர் ஆடியோ லாஞ்ச் மேடை அரசியலின் அங்கமாக விளையாட்டு துறை சார்ந்த விழா ஒன்றில் மேடையேறிய முதல்வர், விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தின் பலன்கள் மீது தனது பெயரை எழுதிக் கொள்ள முனைந்தது வேடிக்கையாக இருந்தது. விளையாட்டு வீரர்களுக்கான அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு என்பது, 2018-ல் எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு 2 சதவீதமாக அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விளையாட்டு வீரர்கள் அளித்த விழாவில், இந்த இட ஒதுக்கீட்டை 3 சதவீதமா  உயர்த்தி நான் அறிவித்தேன். அதன் பிறகு, 2020-ல் கொரோனா பெருந்தொற்றுக் காலம், 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.

இதில் ஸ்டாலின் செய்தது என என்ன இருக்கிறது? பணி ஆணைகள் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த முதல்வரின் ஒரே பங்களிப்பு. 7.5 சதவீத மருத்துவ உள் இடஒதுக்கீடு ஆகட்டும், 3 சதவீத விளையாட்டு வீரர்களுக்கான ஆகட்டும்- நான் அரசுப்பள்ளியில் படித்தவன், விளையாட்டு வீரர்களின் உணர்வுகளைப் புரிந்தவன் என்ற முறையில், அவர்களுக்காக பார்த்துப் பார்த்துச் செய்த சாதனைத் திட்டங்கள். இதெல்லாம் ஸ்டாலின் போன்றோருக்கு எப்படி புரியும்? இப்படி ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை.

அதனால், இப்படி வெட்கமின்றி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள் மு.க.ஸ்டாலின். (ஓஹ்... அப்படி எதுவுமே இல்லையோ..? சரி, தோல்வி அடைய வாழ்த்துகள்) என் அதில் பதிவிட்டுள்ளார்.