இனி இவர்களுக்கு மது கிடையாது! தமிழக அரசின் புதிய கிடுக்கிப்பிடி உத்தரவு!

 
tasmac

சென்னை தலைமை செயலகத்தில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆய்வுக்கூட்டம், துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அதை தொடர்ந்து, மது விலக்கு ஆயத்தீர்வை துறை ஆணையர் பூஜா குல்கர்னி வெளியிட்ட அறிக்கை: 

தமிழக மதுபான விதிகளின் கீழ், உரிமம் பெற்ற அனைத்து கிளப் மற்றும் நட்சத்திர ஹோட்டல் வளாகங்களில், 21 வயதிற்கு குறைவான நபருக்கு மதுபானம் விற்கவோ, வழங்கவோ கூடாது. 

ஒருவரது வயது குறித்து சந்தேகம் இருந்தால், அவரது வயதை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். உரிமம் பெற்ற கிளப்கள், தங்களிடம் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்க வேண்டும். அவர்களுக்கும், தகுதியுடைய அவர்களின் விருந்தினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். 

கிளப் நிர்வாகங்கள், கிளப் நிறுவப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப, பிற பொழுதுபோக்கு, கலாசாரம், விளையாட்டு, சமூக செயல்பாடுகள் தொடர்ந்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இந்த உத்தரவுகளை, அனைத்து உரிமதாரர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விதிமீறல் இருந்தால், சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.