"வரும் 29ம் தேதி சனிப் பெயர்ச்சி இல்லை"- திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

வரும் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி இல்லை என திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். இந்நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி (Saturn's transit) தொடர்பாக பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29 அன்று சனி பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன. இது தொடர்பாக, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம்- அருள்மிகு ஸ்ரீசனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம் "வாக்கிய பஞ்சாங்கம்" முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். இந்த பாரம்பரிய கணிப்பு முறையின் படி, 2026ஆம் ஆண்டிலேயே சனிப் பெயர்ச்சி நடைபெறும் என தெரிவிக்கின்றோம். ஆகையினால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு (Transit Rituals) நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கிய பஞ்சாங்கம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கத்திலிருந்து திருத்தியமைக்கப்பட்டு கடந்த சில நூறு வருடங்களுக்கு முன்பிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.