புதிதாக செய்யப்பட்ட சிலையில் துளி கூட தங்கம் இல்லை! பக்தர்களிடம் நன்கொடையாக பெறப்பட்ட 312 சவரன் தங்கம் எங்கே?
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிய உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு எனப் புகார் எழுந்துள்ளது. பக்தர்களிடம் நன்கொடையாக 312 சவரன் தங்கம் பெறப்பட்ட நிலையில், புதிய சிலையில் துளி கூட தங்கம் இல்லை என ஐஐடி அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின், 1,000 ஆண்டு பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை சேதமடைந்ததால், புதிய உற்சவர் சிலை செய்ய, அறநிலையத்துறை சார்பில், கடந்த 2015 ஆம் ஆண்டில் முடிவானது. அதன்படி, ஸ்தபதி முத்தையா வழிகாட்டுதலின்படி, புதிய சோமாஸ்கந்தர் உற்சவர், ஏலவார்குழலி அம்மன் என இரு சிலைகள், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் செய்யப்பட்டன. புதிய சிலைகள் செய்வதில், 5 சதவீதம் தங்கம் சேர்க்க வேண்டும் என அறநிலையத்துறை உத்தரவில் உள்ளது. ஆனால், தங்கம் சேர்க்கப்பட்டதில் பல்வேறு சந்தேகம் எழுந்ததால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்கள் பெறப்பட்டன. அதன்படி, தங்க முறைகேடு நடைபெற்றதாக பல்வேறு ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகி பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக, சிலை செய்வதற்காக, பக்தர்கள் வழங்கிய தங்கத்திற்கு ரசீது ஏதும் போடப்படவில்லை, சிலை செய்யும்போது வீடியோ, போட்டோ பதிவும் செய்யப்படவில்லை.
இது போன்ற காரணங்களால், அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின்படி, சிவகாஞ்சி போலீசார், 2017ல் வழக்கு பதிந்தனர். பின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இந்த வழக்கை கையில் எடுத்தனர். இந்த வழக்கில், முத்தையா ஸ்தபதி, செயல் அலுவலர் முருகேசன், அர்ச்சகர் ராஜப்பா, செந்தில் உள்ளிட்ட 9 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். பின்னர், அறநிலையத் துறையின் முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் 2017ல் கைது செய்யப்பட்டனர். ஐ.ஐ.டி., நிபுணர் குழு மூலம், புதிதாக செய்த உற்சவர் சிலைகளை ஆய்வு செய்ததில், துளி தங்கம் கூட சிலையில் இல்லை என, தகவல் வெளியாகியிருந்தது. இதனால், தங்கம் வழங்கிய பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இவ்வழக்கை கிடப்பில் போட்டதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சிவகாஞ்சி போலீசாருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
அதை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தினர். காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், இந்த வழக்குக்கான குற்றப் பத்திரிகையை சிவகாஞ்சி ஆய்வாளர் தாக்கல் செய்தார். கும்பகோணத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் இருந்த புதிய உற்சவர் சிலைகளை காஞ்சிபுரம் கொண்டு வந்து, நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இச்சிலை, ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை பாதுகாப்பு மையத்தில் உள்ளது. 312 சவரன் தங்கம் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்டதாக புதிய எஃப் ஐ ஆர் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி சார்பில் ஆய்வு செய்ததில் துளி தங்கம் கூட இல்லை எனவும் திருத்தப்பட்ட எஃப் ஐ ஆர் இ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 468 பிரிவான போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தல், 471, 380(2) கோவில் சிலைகள் மற்றும் சிலை சார்ந்த பொருட்கள் திருடுவது உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விசாரணைகள் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.


