அப்போ வேற வழியில்ல.. ஒப்புதல் அளித்து தான் ஆகனும் - அமைச்சர் ரகுபதி..

 
அமைச்சர் ரகுபதி


ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு  ஆளுநர் ஒப்புதல் அளித்து தான் ஆக  வேண்டும், அது தான் சட்டம் என்று சட்டத்துறை  அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால், அடுத்தடுத்து பல்வேறு தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. பலர் இந்த சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி, பணத்தை இழந்து தற்கொலை முடிவை எடுக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை 44 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கிடையே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்திய நிலையில், தமிழக சட்டப்பேரவையில்  அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக  அனுப்பி வைக்கப்பட்டது.  அதற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கிய நிலையில், அவசர சட்டம் கடந்த அக்.3ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டம்
 
. ஆனால், இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. அத்துடன்  மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தார். இதனையடுத்து  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று விளக்கமளித்தார். இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருந்தது.  இந்தநிலையில், நேற்றைய தினம்  ஆன்லைன் ரம்மி மசோதாவை மீண்டும் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். கிட்டத்தட்ட  4 மாதங்கள் கிடப்பில் வைத்திருந்து, தற்போது திருப்பி அனுப்பியிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 ஆளுநர் ஆர்.என் ரவி

இந்த நிலையில் சென்னை  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை  அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு சில கேள்விகளை ஆளுநர் கேட்டிருந்தார். அதற்கு விளக்கம் அளித்து விட்டோம். அதன் பிறகு இப்போதுதான் முதன் முறையாக மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். திருப்பி அனுப்பிய மசோதாவை நாங்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்துதான் ஆக வேண்டும் அதுதான் சட்டம். புதிய சட்டம் இயற்றுவதற்கு உரிமை உள்ளது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது” என்று தெரிவித்தார்.