மாணவியின் கழுத்தை நெறித்த இளைஞர்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

 
தர்ம அடி

அன்னூர் பேருந்து நிலையத்தில் மாணவியை திடீரென கழுத்தை நெறித்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கோவை,திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் மையப்பகுதியாகவும், தமிழக - கர்நாடக மாநில எல்லை பகுதியாகவும் அன்னூர் இருந்து வருகிறது. இதனால் அன்னூர் பேருந்து நிலையத்தை நாள்தோறும் பணி நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை மாணவிகள் (17 வயது) இருவர் வீட்டிற்கு செல்வதற்காக அன்னூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென மாணவிகளில் ஒருவரின் கழுத்தை இறுக்கி பிடித்து நெறித்துள்ளார். 

இதனையடுத்து பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர்,பொதுமக்கள் இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பொதுமக்களிடமிருந்து அந்த நபரை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பேருந்துக்காக காத்திருந்த மாணவியின் கழுத்தை முன், பின் தெரியாத மர்ம நபரால் நெறித்த இளைஞரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பேருந்து நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.