தொடரும் சோகம்.. அமோனியா வாயு கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு..!!

 
Q

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21 ஆம் தேதி அம்மோனியா வாயு கசிந்தது. 

இதில் 74 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 2 தனியார் மற்றும் 2 அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் வரை 9 வடமாநில பெண் தொழிலாளர்கள் பலியானார்கள். அவர்களில் 5 பேரின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது சொந்த மாநிலத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒடிசாவை சேர்ந்த வடமாநில பெண் தொழிலாளி சுபாசி ஜூவாங்ஸ் (வயது 24) என்பவரும் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 10 ஆனது. 

இந்த நிலையில், திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவை சேர்ந்த ரீட்டா ஜூவாங்கா ( வயது 28) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம் வாயு கசிவில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.