அதிரடி காட்டும் தமிழக அரசு! இனி 21 வயது கீழ் உள்ளவர்கள் மதுபானம் வாங்க முடியாது..!!

 
Q

டாஸ்மாக் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் நடைமுறைகளையும் முறையாக பின்பற்ற அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதிலும் சமீபகாலங்களாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.இந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003, விதி 11ஏ கொண்டுவரப்பட்டது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில்:

மது வாங்க வரும் நபரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால், விற்பனையாளர்கள் அவரிடம் உரிய வயதுச் சான்றிதழைப் கேட்டுப் பெற வேண்டும்.

ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் (Driving License), வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே மது வழங்க வேண்டும்.

21 வயது பூர்த்தியாகாத நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் மது விற்பனை செய்யக் கூடாது என்பதில் பணியாளர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விதிமீறல் கண்டறியப்பட்டால் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கடையின் முன்பும் "21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை செய்யப்படமாட்டாது" என்ற வாசகம் அடங்கிய அறிவிப்புப் பலகையைத் தெளிவாகத் தெரியும்படி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட மேலாளர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் அவ்வப்போது கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும், அப்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சிறார்களிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதாக புகார் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

.