தேர்தல் எதிரொலி- 6 கோடி பாமாயில், 60,000 டன் பருப்பு கொள்முதல் ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு!
சட்டமன்ற தேர்தல் காரணமாக முன்கூட்டியே ஏப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான 6 கோடி பாமாயில் பாக்கெட்கள், 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 60 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதலை தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.

தமிழகத்தில் குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றுடன், சிறப்புப் பொது விநியோக திட்டத்தில் ஒரு லிட்டர் பாமாயில், ஒரு கிலோ துவரம் பருப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பொருட்கள், தனியாரிடம் இருந்து ஒப்பந்தம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கான பாமாயில், சர்க்கரை, பருப்பை முன் கூட்டியே கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரியுள்ளது.
இதன்படி, 3 மாதங்களுக்கான 6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயிலை எந்தவித தங்கு தடையுமின்றி விநியோகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


