"ஏற்காடு வருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும்" - மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்!!

 
ttn

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.  குறிப்பாக ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டும் , பாறைகள் உருண்டு விழுந்தும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இன்று பெய்த பலத்த மழையின் காரணமாக ஏற்காடு குப்பனூர் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்தது. சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. இதனால் உள்ளூர் வாசிகள் மட்டுமில்லாமல் சுற்றுலா பயணிகளும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

yercaud

இதுகுறித்து  சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்ட அறிக்கையில், “ஏற்காடு வட்டத்தில் கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்காடு மலைப் பாதைகளில் ஆங்காங்கே நில சரிவுகள் ஏற்பட்டு மலைப்பாதைகளில் பாறைகள் உருண்டு விழும் நிகழ்வுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.

ttn

இதன் காரணமாக போக்குவரத்து தடை ஏற்படுகிறது.  இந்நேர்வுகளில் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, அத்தியாவசிய நோக்கம் இன்றி சுற்றுலா நோக்கில் ஏற்காட்டிற்கு செல்வதை தற்போதைய சூழலில் தவிர்க்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏற்காடு மலைப்பாதையில் பாதுகாப்பான போக்குவரத்துக்காக மாவட்ட நிர்வாகம்  வழங்கும் அறிவுரைகளை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது ”  என்று குறிப்பிட்டுள்ளார்.