போலி டாக்டர் பட்டம் வழங்கிய நபர் தலைமறைவு..

 
போலி டாக்டர் பட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து வழங்கப்பட்ட போலி கௌரவ டாக்டர் பட்டங்களை சினிமா பிரபலங்களுக்கு வழங்கிய ஹரிஷ் தலைமறைவாகியுள்ளார்.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை(பிப்ரவரி 26 )  அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில்,   சினிமா பிரபலங்களான இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்,  நகைச்சுவை நடிகர் வடிவேல் உள்ளிட்ட  பலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.  இந்நிலையில் வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியானவை என்றும், அண்ணா பல்கலைக்கழகம் இதனை வழங்கவில்லை என்பதும் தெரியவந்தது.

anna university

 இதனைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில்  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கோட்டூர்புரம்  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏமாற்றுதல், மோசடி செய்தல், அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்துதல், தகுதியற்றவருக்கு டாக்டர் பட்டம் வழங்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னதாக இதுகுறித்து விளக்கமளித்திருந்த  அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், இதற்கும்  அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும்,  ஆடிட்டோரியத்தை வாடகைக்கு கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து வழங்கப்பட்ட போலி கௌரவ டாக்டர் பட்டங்களை சினிமா பிரபலங்களுக்கு வழங்கிய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்  ஹரிஷ் தலைமறைவாகியுள்ளார்.  அவரது தொலைபேசி எண்ணும் அணைக்கப்பட்டுள்ளதாகவும்,  அவரை போலீசார் தற்போது தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.