மக்களுக்கு அடுத்த ஷாக்..!! தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.4 உயர்வு..!
இந்தியா முழுவதிலும் வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், தனியார் பால் நிறுவனங்கள், பால் வணிகத்தை தக்கவைத்துக்கொள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருகின்றன.
இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்ட, பால் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தின.
தற்போது, 2-வது முறையாக மீண்டும் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் முடிவிற்கு தனியார் பால் நிறுவனங்கள் வந்துள்ளன.
அதன்படி, இந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ஆரோக்யா பால் நிறுவனம் நாளை (9-ந் தேதி) முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால், 500 மில்லி சமன்படுத்தப்பட்ட பால் ரூ.29-ல் இருந்து ரூ.31 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.39-ல் இருந்து ரூ.41 ஆகவும் விலை உயர்கிறது.
இதேபோல், 1000மில்லி (1 லிட்டர்) சமன்படுத்தப்பட்ட பால் ரூ.54-ல் இருந்து ரூ.57 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.66-ல் இருந்து ரூ.69 ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.73-ல் இருந்து ரூ.76 ஆகவும், 500 கிராம் ஹட்சன் தயிர் ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும், ஆரோக்யா தயிர் ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் விலை அதிகரிக்கிறது.

