"ஜாம்பி" போல மாறிய மனிதன்! 2 மணி நேரமா ஒரே இடத்தில் நின்ற இளைஞர்..!

 
1

 சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், டெலிவரி பணியில் இருந்ததாகக் கூறப்படும் ஒருவர் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எந்த அசைவுமின்றி ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பது காணப்படுகிறது. வாயில் சிகரெட் வைத்தபடி, கண்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் சுற்றுப்புறத்தை முற்றிலும் உணராதவரைப் போல இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் அங்கு இருந்தவர்கள் இது சாதாரணமா என்று குழம்பிய நிலையில் தூரத்தில் இருந்து கவனித்தனர்; பின்னர் அவரது நிலை அசாதாரணமாக இருப்பது தெளிவானதும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், போதைப் பொருள் பயன்பாடு குறித்து கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பலரும் இதனை “ஜாம்பி டிரக்” என அழைக்கப்படும் ஸைலஸைன் உடன் தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்து வருகின்றனர். முதலில் கால்நடைகளுக்கான மயக்க மருந்தாக உருவாக்கப்பட்ட ஸைலஸைன், சமீப காலங்களில் மனிதர்களால் தவறாக பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஃபெண்டானில், ஹெராயின், மார்ஃபின் போன்ற ஆபத்தான ஓபியாய்டுகளுடன் கலந்து பயன்படுத்தப்படும் போது இது மிகவும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

இதனால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நீண்ட நேர மயக்கம், உடல் அசைவின்மை, இதயத் துடிப்பு குறைதல், ரத்த அழுத்தம் தாறுமாறாகக் குறைதல், சுவாசக் கோளாறு போன்றவை ஏற்படுகின்றன. சில நேரங்களில் பயனாளர்கள் வெளியில் நின்றபடியே அல்லது அமர்ந்தபடியே “உறைந்த” நிலையில் காணப்படுவது இதன் முக்கிய அறிகுறியாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த போதைப் பொருள் தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது தோல் சேதம், ஆழமான புண்கள், உடல் உறுப்புகள் அழுகுதல் போன்ற தீவிர உடல்நல பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.