15 லட்சம் பேர் வாழ்க்கை கேள்விக்குறி.. மறுதேர்வு கோரும் ராமதாஸ்..!

 
1

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள நான்காம் தொகுதி பணியிடங்களை நிரப்பும் நோக்குடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 9ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. மொத்தம் 6244 பேரை தேர்ந்தெடுப்பதற்கான இந்தப் போட்டித் தேர்வுக்காக தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வுக்காக 7247 தேர்வு மையங்களும், அவற்றில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வுக் கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வை சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் எழுதினர்.

தேர்வு கண்காணிப்பாளர்கள்: குரூப் 4 பணிக்கான தேர்வுக் கூட கண்காணிப்பாளர்களாக வந்தவர்களுக்கு இத்தேர்வு நடைமுறைகள் பற்றி எதுவும் தெரியவில்லை. சரியாக காலை 9.00 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட வேண்டும். அடுத்து 9.15 மணிக்கு வினாத்தாள் தொகுப்பு வழங்கப்பட்டு, அதில் உள்ள பக்கங்கள் சரியாக உள்ளனவா? என்பதை ஆய்வு செய்த பிறகே வினாத்தாள் எண்ணை விடைத்தாளில் குறிப்பிட வேண்டும். அதன் பிறகு சரியாக காலை 9.30 மணி முதல் தேர்வர்கள் விடைகளை எழுதத் தொடங்க வேண்டும் என்பதே ஆணை.

ஆனால், பல மையங்களில் தேர்வு கண்காணிப்பாளர்கள் காலை 9.15 மணி பிறகு தான் தேர்வுக் கூடங்களுக்கே வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து மிகவும் தாமதமாகத்தான் விடைத்தாள்களையும், வினாத்தாள்களையும் தேர்வர்களுக்கு வழங்கியுள்ளனர். சில தேர்வு கூடங்களில் காலை 10 மணிக்குப் பிறகு தான் வினாத் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த தாமதத்தால் பல்லாயிரக்கணக்கான தேர்வர்களால் தேர்வை சரியாக எழுத முடியாமல் போய்வுள்ளது. இதனால் குறைவான நேரத்தில் விடை எழுத வேண்டி இருந்ததால் பல தேர்வர்கள் சரியான விடையை தீர்மானிக்க முடியாமல், பதற்றத்தில் தவறான விடையை தேர்ந்தெடுத்ததும் நிகழ்ந்துள்ளது. அதேபோல், விடை எழுதுவதற்கான நேரம் 12.30 மணிக்கு முடிவடைந்து விடும். அதன்பின்பு 12.30 மணி முதல் 12.45 மணி வரை, எத்தனை வினாக்களுக்கு ஏ வாய்ப்பை தேர்ந்தெடுத்துள்ளனர், எத்தனை வினாக்களுக்கு பி வாய்ப்பை தேர்ந்தெடுத்துள்ளனர் என்ற விவரத்தை பத்திவாரியாக விடைத்தாளின் முதல் பக்கத்தில் இரு இடங்களில் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால், தேர்வுக்கான நேரம் முடிவடைவதற்கு 15 நிமிடங்கள் முன்பாகவே இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், 12.30 மணிக்குள்ளாக இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் தேர்வர்களை கட்டாயப்படுத்தியுள்ளனர். விடைத்தாள் மற்றும் வினாத்தாள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், தேர்வுக்கு பிந்தைய பணிகளை முன்கூட்டியே செய்ய கட்டாயப்படுத்துதல் போன்றவற்றால் ஒவ்வொரு தேர்வருக்கும் 15 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை நேர இழப்பு ஏற்பட்டுள்ளது அதர்ச்சி அளிக்கிறது. இது தேர்வர்களிடையே கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு தான் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் தேர்வு ஆகும். இந்தத் தேர்வை நடத்த சுமார் 50 ஆயிரத்திற்கும் கூடுதலான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்படாதது தான் நடந்த இந்த குழப்பங்களுக்குக் காரணம். சில இடங்களில் தேர்வர்கள் விடையளிக்க முழுமையாக 3 மணி நேரம் வழங்கப்பட்ட நிலையில், பெரும்பான்மையான இடங்களில் தேர்வர்களுக்கு 25% வரை நேர இழப்பு ஏற்பட்டுள்ளது. இது அனைவருக்கும் சமவாய்ப்பு சமநீதி என்ற தத்துவத்திற்கு எதிரானதாக உள்ளது.

 மறு தேர்வு நடத்திடுக: நடந்த இந்த குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். எனவே டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்ற இந்த குளறுபடிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் எனவும் தேர்வர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் நோக்குடன் 9-ம் நாள் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி மறு தேர்வு நடத்துவதற்கும் தேர்வாணையத்திற்கு அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.