ஐடி ரெய்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் நடத்தப்படுகிறது - ஆர்.எஸ்.பாரதி..

 
rs

எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு வருமான வரித்துறை சோதனை நடத்துவதாகவும், கர்நாடகா தேர்தல் தோல்வி பாஜகவிற்கு அச்சத்தை கொடுத்துள்ளது என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.  

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “கர்நாடகத் தேர்தலில் அனுமன் பெயரை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து விடலாம் என்று பாஜவினர் நாடகம் ஆடினார்கள். கர்நாடகத் தேர்தலில் பணத்தை குவித்தார்கள். ஒரு கவருக்குள் ஐந்து ரூ.2000 நோட்டுகளை வைத்து அதன் மீது தாமரை சின்னத்துடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வீடியோ வந்தது. 2018-ம் ஆண்டுக்கு பிறகு ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் இல்லை. ஆனால், கர்நாடகத் தேர்தலில் பாஜவினர் ரூ.2 ஆயிரம் நோட்டை விநியோகம் செய்தனர்.

RAID TTN

கர்நாடகத் தேர்தல் முடிவு காஷ்மீர் முதல் குமரி வரை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று இருக்கும் நேரத்தில், தினசரி போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான செய்திகள் வந்துகொண்டே உள்ளன. இதை திசை திருப்ப வேண்டும் என்ற வஞ்சக எண்ணத்துடன் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத நேரத்தில், முதலீடுகள் தொடர்பான செய்திகளை ஜீரணித்துக் கொள்ள முடியாத பாஜக அரசு இவ்வாறு வருமானவரி சோதனை நடத்தி உள்ளது.

இந்தச் சோதனை பற்றி திமுகவினர் எந்த காலத்திலும் கவலைப்பட்டது கிடையாது. பாஜக என்றால் என்ன, அதன் அதிகாரம் என்பது என்ன என்று சில நாட்களில் செந்தில்பாலாஜி தெரிந்து கொள்வார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். எனவே, செந்தில்பாலாஜியை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டு அண்ணாமலை செயல்பட்டு இருக்கிறார் என்பதற்கு அவரது பேச்சுதான் உதாரணம்.

senthil balaji

முதல்வர் ஸ்டாலின் இல்லாத நேரத்தில் இப்படிச் செய்வது பாஜகவின் மிகக் கேவலமான அரசியலைக் காட்டுகிறது. ஒரு சோதனை நடப்பதற்கு முன்பாக மாநில காவல் துறைக்கு கூறி, உள்ளூர் காவல் துறையுடன்தான் ரெய்டு நடத்துவது வழக்கம். ஆனால், திட்டமிட்டு செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. ஆனால், காவல் துறைக்கு தகவல் இல்லை எஸ்பி கூறுகிறார்” என்று தெரிவித்தார்.