அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து 3 மணிநேரமாக அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை

 
s

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் குழு இன்று மாலை முதல்வரை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பை தொடர்ந்து அரசு அறிவிக்கும் முடிவை பொறுத்து நாளை போராட்டம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப்படும், அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு பலன்களை வழங்க வேண்டும். அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவு காண, அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர், கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட 20 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், சங்கங்கள் தெரிவித்த கோரிக்கைள் தொடர்பாக அமைச்சர்கள் குழுவினர் இன்று மாலை முதல்வரை சந்திக்க உள்ளனர். 

முன்னதாக பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்திக்க ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன், அமைச்சர்கள் குழு முதல்வரை சந்தித்த பிறகு வரும் முடிவுகளின் அடிப்படையில் தான் நாளை போராட்டம் தொடர்பாக முடிவு முடிஎடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.