ஆளுங்கட்சிக்கு விழுந்த 'கிடுக்கிப்பிடி'; தேர்தல் நடத்தை விதிகளின் முழுப் பட்டியல் இதோ!

 
election commision

தமிழகம், கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 

இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலர், தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களின் அரசு தலைமைச் செயலர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- அமைச்சர்கள் தங்களுடைய அலுவல்பூர்வ பயணத்தை தேர்தல் பிரச்சார பணிகளுடன் இணைக்கக்கூடாது. தேர்தல் பிரச்சார பணிகளின்போது அரசு இயந்திரத்தையோ அரசு பணியாளர்களையோ பயன்படுத்தக்கூடாது. அரசுக்குச் சொந்தமான விமானங்கள், வாகனங்கள், இயந்திரங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அரசுப் போக்குவரத்து வசதிகள் எவையும், ஆளும் கட்சியின் நலன்களை முன்னெடுக்க பயன்படுத்தப்படக் கூடாது. 

தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள அல்லது நடைபெற்று வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லங்கள், தங்கும் விடுதிகள் அல்லது பிற அரசு தங்கும் வசதிகள், ‘இசட்’ பிரிவு அல்லது அதற்கு இணையான பாதுகாப்பு வசதியை பெற்றுள்ளவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் சம அடிப்படையில் ஒதுக்கப்படலாம். அத்தகைய தங்கும் வசதிகள் ஏற்கெனவே தேர்தல் அலுவலர்களுக்கோ, தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்களுக்கோ ஒதுக்கப்படாமலோ இருந்தால் அவர்கள் தங்க அனுமதிக்கப்படலாம். தங்கும் நாள்களில் அவர்கள் எவ்விதமான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.

தேர்தல் காலத்தில், அரசு நிதியைப் பயன்படுத்தி நாளிதழ்கள் மற்றும் பிற ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடுவதும், ஆளுங்கட்சியின் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கிலும், அரசியல் செய்திகளுக்குச் சார்புத்தன்மையுடன் கூடிய முக்கியத்துவம் அளிப்பதற்கும், அரசின் சாதனைகள் குறித்த விளம்பரங்களை வெளியிடுவதற்கும் அரசுக்குச் சொந்தமான வெகுஜன ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். 

தேர்தல் ஆணையத்தால் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நேரம் முதல், அமைச்சர்களும் பிற அதிகாரிகளும் தங்கள் விருப்புரிமை நிதியிலிருந்து எவ்வித மானியங்களையோ பணப் பட்டுவாடாக்களையோ வழங்கக் கூடாது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவ்விதமான நிதி மானியங்களையும் (எந்த வடிவத்திலும்) அறிவிக்கவோ அதுகுறித்த வாக்குறுதிகளையோ அளிக்கக கூடாது. அரசு ஊழியர்கள் நீங்கலாக எவ்வித திட்டங்கள் அல்லது பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுதல் போன்ற நிகழ்வுகளை நடத்தக் கூடாது. 

ஏதேனும் விளம்பரம் ஏற்கெனவே ஒளிபரப்பு/ஒலிபரப்பு அல்லது அச்சு ஊடக வெளியீட்டிற்காக அனுப்பப்பட்டிருந்தால், அவை உடனடியாக நிறுத்தப்படுவதையும்; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே செய்தித்தாள்கள், இதழ்கள் போன்ற அச்சு ஊடகங்களில் அத்தகைய விளம்பரங்கள் எதுவும் வெளியாகாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். முன்பே விளம்பரங்கள் அளிக்கப்பட்டிருந்தால் அவை உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.