எப்போது வேண்டுமானாலும் தவெக அரசு கவிழலாம்! - சேலத்தில் இபிஎஸ் அதிரடி பேச்சு!
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது,
“விஜய்யின் தற்போதைய தவெக அரசு என்பது சொந்தக் காலில் நிற்காத ஒரு ‘பொய்க்கால் குதிரை அரசு’ ஆகும். எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கியும், மாற்றுத் திறனாளிகள் முட்டுக் கொடுத்துப் நடப்பதைப் போல பிற கட்சிகளின் தயவிலும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழலாம்” என்று அதிரடியாகக் குறிப்பிட்டார். விளம்பர வெளிச்சத்தை மட்டுமே நம்பி நடத்தப்படும் இந்த அரசு, இன்னும் சில மாதங்களிலேயே தனது பலவீனத்தை உணரும் என்றும் அவர் கணித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு ஒரு முக்கிய அரசியல் ஆலோசனையையும் வழங்கினார். “மக்களைக் கவர சினிமா பாணியில் கோட் சூட் போட்டோஷூட் நடத்துவதை விடுத்து, அடித்தட்டு ஏழை மக்களின் கஷ்டங்களை நேரில் சென்று கேட்க வேண்டும். கள நிலவரங்களைப் புரிந்து கொண்டு செயல்படாமல், கோட்டையில் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு கோப்பு தயாரிக்கும் அரசாங்கம் நீண்ட காலம் நிலைக்காது” என்று அறிவுறுத்தினார். மேலும், கோட் சூட் போன்ற ஆடம்பர உடைகள் ஒரு முதலமைச்சருக்குத் தற்காலிகப் புகழைத் தரலாமே தவிர, மக்களின் நிரந்தரப் பேரன்பைப் பெற்றுத் தராது என்றும் கூறினார்.

